.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Saturday, December 08, 2007

ஆண்டவர்கள் கண்ட சுவர்ணபூமி - பகுதி 2


( குறிப்பு: இக்கட்டுரை மலேசியாவில் 'விடியல்' வாரப்பத்திரிக்கையில் வெளியீடு கண்டுள்ளது. கட்டுரையாசிரியர் : சரஸ்வதி கந்தசாமி )



பகுதி - 2 ( நிறைவு)

ஏறத்தாழ 6ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்டது. மதப்பிச்சாரங்கள் வழி இஸ்லாம் உலக நாடு முழுவதும் பரப்பப்பட்டது. அது இந்தியாவிலும் பரவியது. இந்தியாவிலிருந்து வந்த மதப்பிரச்சாரர்கள் கிழக்கிந்திய நாடுகளில் இஸ்லாத்தை பரப்பினர். இதில் ஷேக் அப்துல்லா என்பவரின் மிகவும் கனிவான தொனியும் அவரது பேச்சாற்றலும் இங்குள்ளவர்களை மிகவும் எளிதில் கவர்ந்தது.

மாறனின் பேரனின் பேரனான, பிரான் மகா வாசன் தனது அரண்மனையில் நடந்த அவரது மதப் பிரச்சாரத்தில் மிகவும் கவர்ந்து, உடனே மதம் மாறினார். தனது பெயரை முஷபர் ஷா என்றும் மாற்றிக் கொண்டு இம் மண்ணின் முதல் இஸ்லாமிய சுல்தான் ஆனார்.'

அவரது மத மாற்றத்திற்கு பிறகு,இந்த பகுதி மக்கள் அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்று அவர்களும் இஸ்லாம் மதத்தை தழுவினர். இதன் வழி வட பகுதியில் இந்து சாம்ராஜ்யம் முடிவுற்றது, சுல்தான்கள் முறை தோற்றுவிக்கப்பட்டது. மேலும் மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சயாம்காரர்கள் அனைவரும் காலம் காலமாக ஏற்பட்ட கலப்பு திருணத்தின் மூலம் வந்த வழித் தோன்றல்கள்தான். அவரகள்தான் இன்றைய வட மாநிலத்து பெரும்பான்மையும் மக்களாகவும் இருக்கின்றனர்.

தென் மாநிலங்களில் ஸ்ரீ விஜயா என்ற பல மிக்க சாம்ராஜ்யம் ஒன்று இருந்து வந்தது. 700 ஆண்டுகள் ஸ்ரீ விஜயா மன்னர்கள் மலேசிய நிலப்பரப்பை ஆண்டுள்ளனர். பிறகு பற்பல காரணங்களினால், அவர்கள் பலமிழக்க நேரிட்டது. இந்தக் காலகட்டங்களில், அதிக எண்ணிக்கையில் வந்த பூகீஸ்காரர்கள் ஜோகூர் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் குடியேறினர். இவர்கள் ஆங்காங்கே வாழ்ந்த மக்களுடன் கலந்து அந்த மாநிலங்களிலும் புதிய ஆட்சி முறையை தோற்றுவித்தனர்.

14ஆம் நூற்றாண்டில் மலாக்காவை ஸ்ரீ விஜயா சாம்ராஜ்யத்தின் இளவரசர் பரமேஸ்வரா நிறுவினார். இவரது மகன் ஒரு பாரசீகப் பெண்ணை திருமணம் செய்து இஸ்லாம் மதத்தை தழுவினர். தனது பெயரையும் ராஜா இஸ்கண்டர் ஷா என்று மாற்றிக்கொண்டார்.மன்னர்களின் மதமாற்றத்தினாலும் இந்தோனேசியா மக்களின் ஆக்ரமிப்பினாலும் இந்து சாம்ராஜ்யங்கள் இம்மலேசிய மண்ணில் படிப்படியாக முடிவுக்கு வந்தன. ஆனால் இங்கே உள்ள மக்களில் பெரும் பகுதியினர் இந்திய வம்சாவளியினரின் கலப்பு வழித்தோன்றல்கள் என்பதுதான் பூர்வீக நிஜம்.

என்வே, இந்தியர்கள் ஒரு காலத்தில் இப்பிராந்தியத்தை ஆண்ட பரம்பரை. 3000 ஆண்டுகளாக நாகரிகம், வாழ்க்கை நடைமுறை, நீர்ப்பாசனம், விவசாயம், கால்நடை வளர்ப்பு, நகர நிர்மாணிப்பு, வியாபாரம், உலக வாணிபம், அரசியல்,கலை, கலாச்சாரம் என்ற வாழ்க்கையின் அனைத்து கூறுகளையும் கற்றுக் கொடுத்தவர்கள். ஒரு பரிணாம வளர்ச்சியையும் ஒரு அரசியல் அமைப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள்.

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை என்று நமது இன்றைய அரசியல் தலைவர்கள், பேச்சாளர்கள் கூறுவதில் சரித்திர உண்மை பொதிந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு பின் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்தில், கடின உழைப்பு, விசுவாசமிக்க தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் ஆயிரமாயிரம் தென்னிந்திய தொழிலாளர்கள் இம்மண்ணிற்கு கொண்டுவரப்பட்டனர். இவர்கள் தான் இன்று இந்திய வம்சாவளியினர் என்று தனித்து கூறப்படுகிறது.

3000 ஆண்டிகளுக்கும் முன் வந்த இந்திய வர்த்தகர்கள் எப்படி இந்த மலேசிய மண்ணிற்கு ஒரு அடையாளத்தை பாரம்பரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தனரோ, அதே போல் கடந்த நூற்றாண்டுகளில் சஞ்சிக்கூலிகளாக தருவிக்கப்பட்ட தென்னிந்திய தொழிலாளர்கள் தங்கள் அயராத உழைப்பின் வழி மலேசியாவின் பொருளாதாரத்திற்கு அஸ்திவாரம் அமைத்துக் கொட்டுத்தனர்.

இந்த மண்ணிலே இந்திய சமுதாயத்திற்கு ஒரு தொன்மையான சரித்திரம் இருக்கிறது. மரியாதைக்குரிய ஒரு பாரம்பரியம் இருக்கிறது. நாம் வடித்த வியர்வை இருக்கிறது. நாம் போட்ட உழைப்பு இருக்கிறது. இருந்தும், இந்த சமுதாயம் தெருவுக்கு வந்தது ஏன் ?


- நன்றி : சரஸ்வதி கந்தசாமி, 'விடியல்' ( 5.12.2007-11.12.2007)


===================== முற்றும் ==========================

0 Comments:

Post a Comment

<< Home