.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Sunday, January 15, 2006

அறிவியல் பல்கலைக்கழகத்தில் 'பொங்கல் விழா 2006'


அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்".


என திருவள்ளுவர் கூறியுள்ளார்.

இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தவர்கள் பழந்தமிழர்கள். நம் முன்னோர் பெரும் மகிழ்ச்சியோடும் மிகச் சிறப்பாகவும் கொண்டாடிய விழாக்களில் பொங்கல் விழாவும் ஒன்று. தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழிக்கொப்ப தைமாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா தமிழர் வாழ்வில் தனிச்சிறப்பைக் கொண்டது.

மலேசியாவில் பொங்கல் விழா:

நேற்று நாடு தழுவிய அளவில் மலேசிய தமிழர்கள் பொங்கல் விழாவை மிக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புலம் பெயர்ந்த தமிழர்களில் மலேசியத் தமிழர்களும் தொடர்ந்து பண்டைய தமிழகத்தின் பண்பாட்டின்படி அறுவடைத் திருவிழாவாகவும், புதிய நற்காரியங்களைத் தொடங்குவதற்கான ஒரு மங்கள நாளாகவும் கொண்டாடி வருகின்றனர்.

ஐயாயிரம் ஆண்டுகள் பெருமை வாய்ந்த அறுவடைத் திருநாளான பொங்கலை மலேசிய பாணியில் கொண்டாடுமாறு இந்திய சமூகத்தினரை ம.இ.கா வின் தேசியத் தலைவரும் பொதுப்பணி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் முன்னதாக வானொலியில் சிறப்பு பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

" இது போன்ற நிகழ்வுகளின் வழியாகத்தான் நாம் இந்தியர்களின் பாரம்பரியத்தை பிற இனங்களுக்கு அறிமுகப்படுத்த முடியும்!" என அவர் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கலிடும் போட்டி:


அக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் - இந்திய பண்பாட்டுக் கழகத்தினர் பிற இன மாணவர்களைக் கவரும் வகையில் "பொங்கலிடும் போட்டி" ஏற்பாடு செய்தனர்.
முதன் முறையான முயற்சி என்றாலும் பிற இன மாணவர்கள் குறிப்பாக மலாய்க்காரர்கள் மற்றும் சாபா மாநிலத்தினர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கினர்.

நிகழ்வு நடைபெற்ற வளாகத்தைச் சுற்றிலும் மாவிலை தோரணம், வாழை மர அலங்காரம் கலைகட்டியது. இந்திய மாணவர்கள் குறிப்பாக பெண்கள் பாரம்பரிய உடையில் காட்சியளித்தனர். ஆண்கள் அனைவரும் வேட்டி கட்ட வில்லை என்றாலும் கால்சட்டை ஜிப்பா அணிந்திருந்தனர். வேட்டி ஜிப்ப சகிதம் இருந்தவர்களில் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு. அன்பரசனும் ஒருவர்! தமிழர் பண்பாடு தென்பட்டது.

விழா சீருடன் நடைபெற முதல் பருவ மாணவர்கள் சிலர் ஏற்பாட்டுக் குழுவினருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். பிரதான மேடையின் பக்கத்தில் பிற இன மாணவர்களுக்கு பொங்கலின் தத்துவத்தை விளக்க கண்காட்சி பகுதியும் பலரைக் கவர்ந்தது.இந்திய மாணவர்களின் கைவண்ணம் தெரிந்தது. இணையத்தில் திரட்டிய பொங்கல் பற்றிய ஆங்கில விளக்கமும் அங்கு ஒட்டப்பட்டிருந்தது.

அடியேன் பார்த்து இரசித்த மற்றொன்று கோலம்.தாமரை மலரின் மேல் விளக்கு - பல வர்ணங்களிலான அரிசி கோலம். அழகாகவும் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையிலும் இருந்தது.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் திரு. சுரேஷ்வரன், இந்திய பணியாளர் சங்கத் தலைவர் திரு. முனியாண்டி, பேராசிரியர் திரு. சுரேஷ் மற்றும் பல்கலைக்கழக மன்ற பதிவு அதிகாரி திரு. நஸ்ருல் மற்றும் சில பிரமுகர்கள் கலந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.


சுமார் 150 இந்திய மாணவர்களோடு இணைந்து பிற இன ( சீன, மலாய் ) மாணவர்களும் கலந்து கொண்டனர். பொங்கலிடும் போட்டியில் கலந்து கொண்ட 22 குழுக்களில்( ஒவ்வொரு குழுவிலும் 4 - 6 மாணவர்கள் ), 4 குழுக்கள் முழுக்க பிற இனத்தவர் ஆவர். போட்டி இரு பிரிவினர்க்கும் ஏதுவாக நடத்தப்பட்டது. இந்தியர் அல்லாத பிரிவில் கலந்து கொண்ட 3 குழுக்கள் வென்று பரிசையும் தட்டிச் சென்றனர். இந்திய குழுக்களில் மூன்று குழுக்கள் வென்றன. "மச்சி" குழு பொங்கலிடும் போட்டியில் முதலிடம் வகித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.


போட்டியில் கலந்து கொண்ட குழுக்கள் முன்னேற்பாடோடுதான் வந்திருந்தனர் போலும். செங்கல் அடுப்பிட்டு, தீ மூட்டி, மண்சட்டியில் பாலூற்றி 'பொங்கும்' போது குழுவாக 'குலவி' ஓசை எழுப்பினர். சில குறும்பு ஆண் மாணவர்கள் சற்று கூடுதலாகவே கூச்சல் எழுப்பினர். ( அந்த காலத்து அமெரிக்க ஆங்கில படங்களில் சிவப்பு இந்தியர்கள் ஒரு வித ஓசையிடுவார்களே ..அதை ஞாபகப்படுத்தி விட்டனர்) போட்டி விதிமுறைகளில் குழுவினர் ஒத்துழைப்பு, அலங்காரம், பொங்கலின் சுவை என பல கூறுகள் இருந்தன. 22 குழுக்களில் 21 குழுக்கள் பக்குவமாக பொங்கலிட்டு நீதிபதிகளை அழைத்து சுவை பார்க்க்குமாறு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு. அன்பரசன் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! பொங்கலன்றே அவருடைய பிறந்த நாள்! நிகழ்ச்சியை ஓரளவு வெற்றிகரமாக நண்பர்களின் உதவியோடு நடத்திக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் அவர் முகத்தில் தெரிந்தாலும் ஒருவித படபடப்பு இருக்கவே செய்தது. திட்டமிட்டப்படி அனைத்து காரியங்களும் நடைபெற்று நிறைவெய்த வேண்டும் என்ற எண்ணமாக இருந்திருக்க வேண்டும். ( அல்லது, இந்த வாசுதேவன் சார் வேறு வந்து நிறைய குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுகிறாரே...! என்று கூட இருக்கலாம் !)விழா நிறைவுறும் தருவாயில் அன்பரசனுக்கு நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்து ( ஆங்கிலத்தில் ) பாடி 'கேக்' ஊட்டி மகிழ்வித்தனர்.

வருகைப்புரிந்த ஆலோசகர்களில் இணைப்பேராசிரியர் திரு.சுரேஷ்வரன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இரத்தினச் சுருக்கமா இருந்தது அவரது உரை. "இவ்வாண்டு மாணவர்களின் பங்கேற்பும் ஆரதவும் நிறைவளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்திய மாணவர்களோடு பிற இன மாணவர்களும் கலந்து பொங்கலிட்டது கண்டு மகிழ்ச்சி. இது எதிர்வரும் காலங்களில் தொடர வேண்டும். மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளைக் கொண்டாடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.

யூ.எஸ்.எம் பல்கலைக்கழக இந்திய பணியாளர் சங்கத் தலைவர் திரு.முனியாண்டி அவர்களிடம் பேச சற்று நேரம் கிடைத்தது.அவர், " இம்மாதிரியான பல்லின மாணவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யும் எந்த நிகழ்ச்சிக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதியும் நல்லாதரவும் வழங்கி வருகிறது. நம் கலாச்சாரத்தை பிற இனத்தவர்களுக்குக் காண்பிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு" என்றார்.மேலும் அவர்"இது முதல் முயற்சிதான். இனி வரும் காலங்களில் நாம் பெரிய அளவில் பொங்கல் விழா ஏற்பாடு செய்ய இவ்விழா வழிவகுத்துள்ளது" என்று கருத்துரைத்தார்.

ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு.அன்பரசன் அவர்களிடம் உரையாடும்போது " இந்த விழா சிறப்புடன் நடைபெற ஒத்துழப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக பிற இன மாணவர்கள் கலந்து கொண்டது தமக்கு பெரும் மகிழ்வை உண்டாக்கியுள்ளது" என்றார். ஏற்பாட்டுக் குழு செயலர் குமாரி மனிமொழி சுப்பையா போட்டி முடிவுகளை தேசிய மொழியிலும் தமிழிலும் கவரும் வண்ணம் அறிவித்தார். முன்னதாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரின் பணியும் சிறப்பகவே இருந்தது.

ஒட்டு மொத்தத்தில் இவ்வாண்டின் பொங்கல் விழாவை ஏற்று வழி நடத்திய ஏற்பாட்டுக் குழுவினரை வெகுவாகப் பாராட்டுகின்றேன். நல்ல முயற்சி!


அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்,
மலேசியா.

0 Comments:

Post a Comment

<< Home