எது விவேகம் ?
நம் காதில் விழுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும், நாம் கேள்விப்படுகின்ற ஒவ்வோர் அபிப்பிராயத்தையும் அப்படியே நம்பிவிடக்கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். எல்லாவற்றையும் அப்படியே நம்பிவிடுவது விவேகமல்ல.
ஒவ்வொன்றையும் ஏன் நாம் நிதானமாக எடைபோடாமல் விட்டு விடுகிறோம்? எந்தக் கூற்றானாலும் அவை சுயநலமின்றிக் கூறப்படுகின்றனவா, அறநெறிப் படி உள்ளனவா என்று சற்று அவதானிக்க வேண்டும்.
பிறரைப் பற்றிக் கூறப்படும் அவதூறுகளை நாம் உடனே நம்பிவிடுகிறோம்; அதே அளவிற்கு நாம் ஒருவரைப் பற்றிக் கூறப்படும் நல்ல, உண்மை விசயத்தை நம்புவதில்லை! என்னே! எதிர்மறை மனக்குறைபாடுடன் உள்ளோம்.
ஆனால் வாழ்க்கையில் பக்குவப்பட்டவர்கள் பிறர் கூறும் அவதூறு மற்றும் நிந்தனைப் பேச்சுகளை எளிதில் நம்பிவிட மாட்டார்கள். பிறரைப் பற்றிப் புறஞ் சொல்வதும், தாழ்த்திப் பேசுவதும் எந்த மனிதனுக்கும் உள்ள பலகீனம்தான் என்பதைப் பக்குவப்பட்டவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.