.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Monday, December 12, 2005

கற்றல் கற்பித்தலில் மொழி விளையாட்டு

விளையாட்டு முறையை பயிற்றியலில் மேற்கொள்வதன் மூலம் விளைபயன்மிக்க நன்மைகளை அடைய முடியும்.தற்போது தோன்றும் புதிய கல்வி முறைகள் பெரும்பாலும் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் தோன்றுகின்றன.இவ்விளையாட்டு முறையினால் கற்றலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.இம்முறையில் காணப்படும் கட்டாயமின்மையினால் மாணவர்கள் ஆர்வத்தோடும் பற்றோடும் கற்றலில் ஈடுபடுகின்றனர்.

மொழி விளையாட்டானது விளையாட்டு முறையின் ஒரு கூறாகும்.மாணவர் எளிய முறையில் மொழியைக் கற்கவும்,மொழித் திறனை அடையவும், மொழி அறிவை வளர்த்துக் கொள்ளவும் மேம்படுத்தவும் இம்மொழிவிளையாட்டு ஓர் இன்றியமையாத பயிற்றியல் கருவியாகப் பயன்பட்டு வருகிறது.

கற்றல் கற்பித்தலில் மொழி விளையாட்டு என்பது மாணவர்களின் ஆர்வத்தையும் தூண்டுதலையும் கொண்டு குறிப்பிட்ட உபகரணங்களுடன் நடைபெறும் ஒரு நடவடிக்கையாகும்.மொழி விளையாட்டு, மாணவர்கள் கேட்டல், பேச்சு, வாசிப்பு அல்லது எழுத்து போன்ற அடிப்படைத் திறன்களைப் பயன்படுத்தி மொழித்திறனை வளப்படுத்தவும் மேம்படுத்தவும் வாய்ப்பளிக்கிறது.

மாணவர்கள் சோர்வடையும் வேளையில் இம்மொழி விளையாட்டானது அவர்களுக்குக் கிளர்ச்சியூட்டி ஆர்வத்துடன் பங்கேற்க வழிவகுக்கின்றது.மொழி விளையாட்டினைப் பயன்படுத்துவதன் மூலம் கொடுக்கப்படும் பிரச்னைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சிந்தித்துத் தீர்வு கண்டறிவதால் மாணவர்களின் அறிவு வளப்படுத்தப்படுகின்றது.

இம்மாதிரியான விளையாட்டின் போது மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்று ஒருவருக்கொருவர் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்கிறார்கள்.மொழி விளையாட்டு மகிழ்ச்சிகரமான கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கி மொழித் திறனை மேம்படுத்த வழிவகுக்குகிறது.

மொழி விளையாட்டின் போது எல்லா மாணவர்களும் பொறுப்பை ஏற்கின்றனர்; தனிப்பட்டவர்களின் உரிமைகள் நன்கு மதிக்கப் பெறுகின்றன; சகோதரத்துவம் வளர்ச்சியடைகின்றது; வற்புறுத்தாமலேயே கூட்டுணர்ச்சியை எல்லோரும் மேற்கொள்கின்றனர். மேலும் கற்றலில் வெறுப்பும் சலிப்பும் ஏற்படுவதில்லை.மாணவர்கள் ஆர்வத்தோடும் பற்றோடும் கற்றலில் பங்கேற்க நல்லதொரு தூண்டுதலாக அமைகிறது.

மொழி விளையாட்டின் போது மாணவர்கள் பல்வேறு பட்டறிவை அடைகின்றனர்.இவ்வளளையாட்டின் போது ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஏரணமாகவும், புதுமையாகவும் நுணுக்கமாகவும் சிந்திக்கத் தூண்டுகிறது. வகுப்பறையிலும் வெளியிலும் ஒரே மாதிரியான சவால் மிகுந்த கற்றல் நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புண்டாக்குகிறது.

Saturday, December 10, 2005

கணினி வழி மொழி கற்பித்தல்

இக்கால மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமலேயே இருந்த இடத்திலிருந்தே கல்வி கற்கும் யுகத்தில் வாழ்கிறார்கள். வானொலி,தொலைகாட்சி,கணினி, இணையம் மற்றும் அவை சார்ந்த மென்பொருள் முதலியன பெருகிவிட்டன. பயிற்றுக்கருவிகளும் பல்கி விட்டன.நவீன தொழில் தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கு அற்புதமான வழி அமைத்து விட்டன என்றால் மிகையாகாது.

பலபயன் கருவியாக விளங்கும் ஒரு சாதனத்தைத் தமிழ் கற்பித்தலுக்கும் பயன்படுத்த ஆசிரியர்கள் முன்வரவேண்டும்! கணினியில் பாடங்களையும் பயிற்சிகளையும் தயாரித்து மாணவக்களிடம் கொடுக்கும்போது, அதை அவர்களே செய்து பழக வாய்ப்பு இருக்கிறது.மாணவக்களின் தேவைக்கு ஏற்பப் பயிற்சிகள் அமையும்போது மாணவர்கள் மிகுந்த நன்மையைப் பெறுவர்.இதை ஆசிரியர் தனியொருவராகச் செய்ய வசதி இல்லை என்றால், ஒரு சிலர் சேர்ந்து செய்யலாம்.பள்ளி நிர்வாகம் இத்தகைய தன்னார்வ ஆசிரியர்களை ஊக்குவித்தால் பல நன்மைகள் அடைய வழி வகுக்கும்.

இப்போது வர்த்தக ரீதியில் கணினி மென்பொருளில் நிறையத் தமிழ்ப் பயிற்சிகளைத் தயாரித்து விற்கிறார்கள். அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.எழுத்துக்களின் உருவும் ஒலியும் ஒரு சேரத் தோன்றும் பயிற்சிகளும் இப்போது வர ஆரம்பித்துவிட்டன. இது தமிழுக்கு ஒரு விடிவுகாலம் எனலாம்.

தமிழாசிரியர்களும் பிறமொழி ஆசிரியர்களைப் போல கணினியை இயக்கத் தெரிந்தவர்களாகவும் அதில் தமிழ்ப் பயிற்சியளிக்க அறிந்தவராகவும் இருந்தால், மாணவர்கள் தமிழ் கற்பதில் பெருமை கொள்வர்.தமிழாசிரியர்களைப் பற்றிய மதிப்பீடும் உயரும்.இதனால், தமிழ் கற்றலிலும் கற்பித்தலிலும் புதுமை ஊடுருவி, புத்தம் புதிய நீரோட்டமும் ஏற்படும். இதனால், மலேசியத் தமிழாசிரியர்கள் கற்றல் கற்பித்தலில் பல்லூடகத் தகவல் தொழில் நுட்பப் பயன்பாடு சற்று பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்ற கருத்தைத் திருத்தி எழுத வாய்ப்பு ஏற்படும்.

மலேசியத் தமிப்பள்ளிகளின் மொழி ஆசிரியர்கள் விவேகம் கொள்வார்களா..?