.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Monday, June 19, 2006

வால் மட்டும் நுழையவில்லை!

ஓர் ஆசிரியர் தம் மாணவனுக்கு அறிவுரைகளைக் கூறிக் கொண்டிருந்தார்; அப்போது மாணவன்,ஓர் எலி அதன் வளைக்குள் நுழைவதைக் கண்டான்.பின் அதையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான்; அதனால் குரு கூறியதே அவனுக்குத் தெரியாது போயிற்று.
குரு அறிவுரை கூறி முடிந்ததும்," மணவா, எல்லாம் நுழைந்ததா?" என்றார்.
மாணவன்," எல்லாம் நுழைந்தது, வால் மட்டும் நுழையவில்லை!", என்றான்.

குறிப்பு:
இங்கு 'வலைக்குள்' பதிவை நுழைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது.

Tuesday, June 13, 2006

மேலும் சில உ.த.மாநாட்டுக் காட்சிகள்-2


மிக அதிகமான எண்ணிக்கையைக் கொண்ட ( நூற்றுக்கும் மேற்பட்டோர் ) வெளிநாட்டுப் பேராளர்களாக - சிங்கை தமிழாசிரியர்கள் மற்றும் கல்விமான்கள்


தஞ்சாவூர், தமிழ்நாட்டைச் சார்ந்த திரு.ஜோன் பிரிட்டோ தாம் எழுதிய புத்தகத்தை டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களிடம் காண்பிக்கிறார்.


சிங்கப்பூர் பிரதிநிதி, நினைவுப் பரிசைப் பெறுகிறார்.



மொரிசியஸ் நாட்டுப் பேராளர்கள்



தென் ஆப்பிரிக்காவைச் சார்ந்த பேராளர், டாக்டர் ஏ.எம்.பிள்ளை,நினைவுப் பரிசைப் பெறுகிறார்.



ஏற்பாட்டுக் குழுத் தலைவருடன்(வலம்), சிங்கையச் சார்ந்த திரு.பொன்.சுந்தரராசு மற்றும் திரு.T.வேணுகோபால்(இடம்)



சிங்கப்பூர் கட்டுரைப் படைப்பாளர் திரு.முகமட் ஷாரிப்ஃ( இடம்) அவர்களுடன் வலைப்பதிவாளர்.

உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக் காட்சிகள்



மாநாட்டுத் திறப்புவிழாவிற்குப் பிறகு பன்னாட்டுப் பேராளர்கள் சிலருடன் பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள்.


சிறப்பு வ்ருகையாளர்கள்:இடமிருந்து வலம் ( டத்தோ முனைவர் த.மாரிமுத்து, துணை அமைச்சர் டத்தோ ஜி.பழனிவேல் & டான்ஸ்ரீ K.R.சோமசுந்தரம்.


ஏற்பாட்டுக் குழுவினர்: திரு.சோ.சுப்பிரமணி(வலம்) & திரு.எம்.முத்துசாமி(இடம்)

ஏற்பாட்டுக் குழுவினர்:இடமிருந்து வலம்( திரு.எம்.புருஷொத்மன்,திரு.எம்.சுப்ரமணியம்&திரு.V.பரமசிவம்


மலேசியப் பேராளர்கள்

இந்தோனேசியா பேராளர் -மேடானில் தமிழ் கற்றல் மையம் ( Medan Tamil Learning Centre )பொறுப்பாளர் திரு.நீலமேகனுடன் வலைப்பதிவாளர்.

Monday, June 12, 2006

தலைமையுரை - ஏற்பாட்டுக்குழு தலைவர் -7-வது உ.த.மா

இணைப் பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன், மலேசியா.
தலைமையுரை


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (1)

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!

மாண்புமிகு அமைச்சர் பெருமகனார் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களே,
மாபுமிகு துணை அமைச்சர்களே, பெருமதிப்பிற்குரிய டான்ஸ்ரீ K.R.சோமசுந்தரம் அவர்களே..

இன்று மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றிலே ஒரு பொன்னாள்! இன்று வரலாறு படைக்கப்படுகின்றது. மலேசியத் தமிழர்களுக்கும் இத்திருநாட்டிற்கும் சுமார் 1000 ஆண்டுகள் வரலாறு உண்டு. இராஜேந்திரச் சோழனின் ( என் பெயரைக் கொண்ட ) வருகையும் அவன் ஆண்ட அரசின் சான்றுகளும் இன்றும் கடாரத்தில் உள்ளன.

எனினும் அதிகமான தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்நாட்டிற்கு வரத்துவங்கினர். அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலும் அதிகமான தமிழர்கள் இந்நாட்டிற்கு வந்தனர். 20-ஆம் நூற்றாண்டிலும் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் இந்நாட்டிற்கு வந்தனர்.

'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்' என்றான் பாரதி. மீசைக்கவிஞனின் வாக்கு இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது.

மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றில் இன்று ஒரு பொன்னாள்; நன்னாள். பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியத் திருநாள்.

அன்பு பேராளர்களே...,

1816-ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட தமிழ் கற்றல் கற்பித்தல் அணுகுமுறை வருகின்ற 2016-ஆம் ஆண்டோடு 200 ஆண்டுகள் எட்டிப்பிடிக்கவிருக்கின்றது. இந்த வரலாறு பதிவேட்டில் மட்டுமல்லாது நம் நினைவேட்டிலும் பதிக்கப்பட வேண்டும்.

தமிழர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து மலேசிய மண்ணில் தஞ்சம் புகுந்து 1000 ஆண்டுகள் ஆகின்றன என வரலாற்றுச் சான்றுகள் சான்றியம் இருக்கின்றன. கடந்த 200 ஆண்டுகளில் தமிழ் கற்றல் கற்பித்தல் ஒரு பரிணாம வளர்ச்சியை நம்மால் காணமுடிகின்றது.

நம்முடைய மாநாட்டின் நோக்கங்களான தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் புதிய செல்நெறிகளை அறிவதும், எதிர்படும் சவால்களை அடையாளம் கண்டு அதனைத் தீர்ப்பதும், பன்னாட்டுத் தமிழ்க் கல்வியாளர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதுமே முதன்மை நோக்கங்களாக அமைகின்றன.

மூன்று நாள் நடைபெறக்கூடிய இம்மாநாடு சீரிய சிறப்போடும் புதுப்பொலிவோடும் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் ஒற்றுமை என்கின்ற அந்த 'மை'தான்.

உதிர்ந்த இந்த 'மை' நம் செயலக நிலைமையை வளமையாக்கியது. பேராளர்களின் கட்டுரைகளைத் தின்மையாக்கியது. மொத்தத்தில் நம் மாநாட்டை செழுமையாக்க்கியது.

இந்த மூன்று நாட்களில் ஆரோக்கியமான கலந்துரையாடல்களும் விவாதங்களும் சிறப்பாக நடந்தேற உள்ளன. இந்தக் கருத்துப் பரிமாற்றங்கள் நிச்சயமாக தமிழ் கற்றல் கற்பித்தலில் ஒரு பரிணாம வளர்ச்சியையும் நிச்சயம் ஏற்படுத்தும். பல்வேறு நாடுகளில் ஏற்படும் சவால்களை அவ்வப்போது ஒரு தொடர் நடவடிக்கையாக இருந்து சில திட்டங்களை வரையறுக்க இச்செயலகம் முடிவு கொண்டுள்ளது.

மாநாட்டுச் சிறப்புகள்:

* பேராளர்களின் எண்ணிக்கை ( 500க்கும் மேற்பட்டோர் )
* ஆய்வடங்கல் (60 கட்டுரைகள் இடம்பெறுகின்றன )
* நாடுகளின் பங்கேற்பு ( சிங்கப்பூர் , தமிழ் நாடு, பாண்டிச்சேரி, கனடா, மொரிசியஸ், தென்
ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, மலேசியா )

அன்பு வெளியூர் பேராளர்களே,

மலேசிய நாடு ஓர் அழகிய நாடு. இயற்கை அன்னை இயல்பாகவே வீற்றிருக்கும் ஒரு பொன்னாடு. வந்தவர்களை வாழ வைக்கவும் அரவணைக்கவும் வழிகாட்டும் திருநாடு. பல இடங்களில் நீங்கள் சுற்றிப்பார்க்கக்கூடிய தளங்கள் இருக்கின்றன.

இந்த 7-வது மாநாடு கோலாலம்பூரில் ஏற்று நடத்த பல்வேறு தரப்பினர் தங்கள் பங்கை ஆற்றியுள்ளனர்.

இந்நிகழ்வுக்கு அரனாக இருந்து புரவலராக வீற்றிருக்கும் தமிழ்த்திரு மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன். டத்தோ ஸ்ரீ யின் முழு ஆதரவு பெருமளவிலான நிதி உதவியும் நல் ஆலோசனையுமே இம்மாநாடு வெற்றி அடைய வழிவகுத்தது. அதுமட்டுமன்றி தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம் குறிப்பாக அதன் நிவாகத் தலைவர் பெருமதிப்பிற்குரிய டான்ஸ்ரீ டத்தோ K.R.சோமசுந்தரம் அவர்கள் அளித்த ஆதரவு நன்றிக்குரியது; நனைவுக்குரியது.

14 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் தொடங்கிய இப்பயணம் இன்று கோலாலம்பூரில் இளைப்பாருகிறது.

உலகத் தமிழாசிரியர் மாநாடு இரண்டாவது முறையாக மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைக் கண்டு பெருமகிழ்வடைகின்றோம். பன்னாட்டுத் தமிழ்க் கல்வியாளர்கள் இங்குக் கூடியிருப்பதைக் கண்டு உள்ளம் பூரிப்பதோடு, இதுபோன்ற சந்திப்புகளும் நட்பும் தொடர வேண்டும், மேலும் இதனை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.

"கைத்திறச் சித்திரங்கள்,
கணிதங்கள் வான நூற்கள்,
மெய்த்திற நூற்கள், சிற்பம்,
விஞ்ஞானம், காவியங்கள்
வைத்துள தமிழர் நூற்கள்
வையத்தின் புதுமை என்னப்
புத்தகசாலை எங்கும்
புகுந்தநாள் எந்நாளொ'
-( பாரதிதாசன் )


நன்றி, வணக்கம்.

Sunday, June 11, 2006

மலேசியாவில் உலகத் தமிழாசிரியர் மாநாடு :ஒரு கண்ணோட்டம்

ஆக்கம் : திருமிகு. எ.சகாதேவன்,
கௌரவச் செயலாளர்,7-வது உலகத் தமிழாசிரியர் மாநாடு.


1992-ஆம் ஆண்டு முதலாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இம்மாநாட்டைச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஏற்று நடத்தியது. மாநாடு ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகச் சகோதரர் வி.ஆர்.பி.மாணிக்கம் இருந்தார்.

இம்மாநாட்டில் மலேசியாவிலிருந்து ஐந்து பேராளர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டின் இறுதியில் இரண்டாவது மாநாட்டை மலேசியா ஏற்று நடத்த வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. சிங்கப்பூரில் மாநாட்டில் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கச் சார்பில் பேராளராகக் கலந்து கொண்ட சகோதரர் கோ.இராதாகிருஷ்ணன் அவர்களிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

1994-ஆம் ஆண்டு ஜூண் திங்கள் 9-ஆம் நாள் முதல் 12-ஆம் நாள் வரை, 'தகவல் யுகத்தில் தமிழ் கற்றல் கற்பித்தல்' எனும் கருப்பொருளில் இரண்டாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டைக் கல்வியாளர்களோடு ஆசிரியர் சங்கங்களும் முன்னின்று நடத்தின. நன்னெஞ்சர்கள் பலர் நன்கொடைகளை வழங்கி இம்மாநாட்டுச் செலவின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டனர். பொதுப்பணி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களும், கல்வி அமைச்சர் டத்தோ சுலைமான் டாவுட் அவர்களும் இம்மாநாட்டுத் திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்தனர். மலேசியத் தலைமை கல்வி இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் வான் ஜாஹிட் நூர்டின் அவர்கள் மாநாட்டை அதிகார பூர்வமாக நிறைவு செய்து வைத்தார். இம்மாநாட்டின்வழி மலேசியத் தமிழாசிரியர்கள் உலக அங்கீகாரம் பெற்றனர்.

இம்மாநாட்டிற்குப் பிறகு பன்னாட்டுத் தமிழ்க் கல்வியாளர்களுடன் தொடர்பு உருவானது. தமிழாசிரியர்களின் பணித்திறம் உயர்வதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டன. இதன் தொடர்பில் உலகத் தமிழாசிரியர்களின் மலேசியச் செயலகம் அமைக்கப்பட்டது. திரு.எ.சகாதேவன் மலேசிய நிகராளியாக நியமிக்கப்பட்டார்.

1996-ஆம் ஆண்டு மொரிசியஸ் நாட்டில் மூன்றாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் மலேசியாவிலிருந்து 35 பேராளர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் மலேசியச் செயலகம் வாசிப்புத் திறன் பற்றிய ஆய்விதழ் ஒன்றனை வெளியிட்டது.

நான்காவது மாநாடு 1998-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 45 மலேசிய பேராளர்கள் கலந்து கொண்டனர். அம்மாநாட்டின் தொடர் நடவடிக்கையாக இணையம்வழி தமிழ்மொழி பயில்வதற்கான 'தமிழ்க்களம்' எனும் அகப்பக்கம் உருவாக்கப்பட்டது. சென்னையிலுள்ள தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்திலிருந்து இது செயல்படுகிறது. அதன் செலவுத் தொகைக்காக மலேசியச் செயலகம் 300,000 ரூபாய் உதவி நிதி வழங்கியது. ஒவ்வொரு நாKஉம் 20,000 பேர் அதன்வழி தமிழ் பயின்று வருகின்றனர்.

ஐந்தாவது மாநாடு 2000-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் மலேசியாவிலிருந்து 60 பேராளர்கள் கலந்து கொண்டனர். ஆறாவது மாநாடு 2002-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. அம்மாநாட்டில் 15 மலேசியப் பேராளர்கள் கலந்து கொண்டனர். ஏழாவது மாநாட்டை ஸ்ரீலங்கா ஏற்று நடத்த இயலாத சூழ்நிலையில் மலேசியச் செயலகம் இப்பொறுப்பை ஏற்று தேசியப் பணியாளர் சங்கம், தேசிய தமிழாசிரியர்கள் சங்கம், தலைமையாசிரியர் மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து நடதுகிறது.

உலகத் தமிழாசிரியர்கள் மாநாடுகளின் தொடர் நடவடிக்கைகளில் புதுவை மொழியியல், பண்பாட்டு மையத்திலும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பல பணியிடைப் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மலேசியாவிலிருந்து நாற்பதுக்கும் அதிகமான கல்வியாளர்கள் அவற்றில் கலந்து பயன்பெற்றனர். மாநாட்டிற்கு முன்பே ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஆய்வடங்கலாக வழங்கப்படுவது அரிது. ஆனால், மலேசியச் செயலகம் ஆய்வடங்கலை முன்கூட்டியே தயாரித்துப் பேராளர்களுக்கு வழங்கியுள்ளது.

இம்மாநாட்டை முன்னிட்டு மலேசியத் தமிழ்ப்பள்ளிகளைப் பற்றிய ஒரு முழுமையான வரலாற்று நூல் தயாரிப்பில் உள்ளது. தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இத்தொகுப்பு விரைவில் வெளிவரும்.

ஏறக்குறைய இருநூற்றைம்பதாயிரம் ரிங்கிட் செலவில் இம்மாநாடு நடைபெறுகிறது. டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் இம்மாநாட்டிற்கு RM 50,000 வழங்கி உதவியுள்ளார். தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கம் RM 20,000 நிதி உதவி வழங்கி உதவியுள்ளது.தமிழ் ஆர்வலர் பலர் நிதியுதவி செய்துள்ளனர். மலேசியக் கல்வி அமைச்சு 250 ஆசிரியர்களை இம்மாநாட்டுக்குத் தன் செலவில் அனுப்பி வைத்துள்ளது.

உலகத் தமிழாசிரியர் மாநாட்டை அடுத்த சுற்றிலும் மலேசியா ஏற்று இதனினும் சிறப்பாக நடத்த வேண்டும். அதற்குத் தமிழாசிரியர்கள் இப்பொழுதே தயாராகிவிட்டார்கள்.

எ. சகாதேவன்.
கௌரவச் செயலாளர்,
7-வது உலகத் தமிழாசிரியர் மாநாடு.

7-வது உலகத் தமிழாசிரியர் மாநாடு


கடந்த ஜூன் 4 முதல் ஜூன் 7-ஆம் திகதி வரை கோலாலம்பூர், மலேசியாவில் "7-வது உலகத் தமிழாசிரியர் மாநாடு" மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாடு மலேசியாவில் நடைபெறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே, 1994-இல் 2-வது மாநாட்டை மலேசியா ஏற்று நடத்திய அனுபவம் உள்ளது. கடந்த காலத்தைக் காட்டிலும் இம்முறை ஏற்பாடு மிக விமரிசையாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம், மலாயா தமிழ் ஆசிரியர்கள் மன்றம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மன்றம் ஆகியவை ஒன்றிணைந்து நடத்தி 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பேராளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

1992-இல் சிங்கப்பூரில் ( முதலாவது மாநாடு ), 1994-இல் மலேசியாவில் ( 2-வது ), 1996-ஆம் ஆண்டு மொரிசியஸ் நாட்டிலும் ( 3-வது ), நான்காவது மாநாடு 1998-இல் சென்னையிலும், 5-வது மாநாடு 2000-ஆம் ஆண்டில் மீண்டும் சிங்கப்பூரிலும், 6-வது மாநாடு 2002-இல் தென் ஆப்ரிக்காவிலும் முறையே நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக 2004-இல் இலங்கையில் நடைபெறவிருந்தது; நடைபெறவில்லை. உலகத் தமிழாசிரியர் செயலகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டாவதது முறையாக மலேசியாவில் " தமிழ்மொழி கற்றல் கற்பித்தல்: புதிய சவால்களும் அணுகுமுறைகளும் " எனும் கருப்பொருளுடன் 2006-இல் 7-வது உலகத் தமிழாசிரியர் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாநாட்டை மாண்புமிகு பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்; திறப்புரையாற்றினார்.


இம்முறை 7-வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டு ஏற்பாட்டுக்குழுத் தலைவராக இணைப்பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் அவர்களும், கௌரவச் செயலாளராகத் திரு. ச.சகாதேவன் அவர்களும் பொறுப்பேற்றிருந்தனர்.


"மனித உறவுகளை இணைப்பது மொழி. மொழி இல்லையெனில் உறவுகள் இல்லை. அந்த உறவுகளும் - அந்த மொழியும் நிலைத்து நின்றால்தான்,அடுத்துவரும் தலைமுறையினர் நமது பாரம்பரியத்தை அறிந்து கொள்ளவும் - பொருள் செறிந்த நமது பண்பாடுகளைப் புரிந்து நன்னெறி மிக்க மனித சமுதாயத்தை உருவாக்க முடியும்!" என்று மாண்புமிகு அமைச்சர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்ற இந்த 7-வது உலகத் தமிழாசிரியர் மாநாடுக்கு மலேசியாவிலிருந்து 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ( பேராளர்கள் ), வெளிநாட்டிலிருந்து சுமார் 200 கல்வித் துறையைச் சார்ந்த பேராளர்களும் கலந்து பயனடைந்தனர். இம்முறை கனடா, சிங்கப்பூர், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மொரிசியஸ், தென் ஆப்ரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து பேராளர்கள் வந்து ஆய்வுக்கட்டுரைகள் படைத்தனர்.

சுமார் 61 ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பாக சிறப்பனதொரு ஆய்வடங்கல் வருகைப்புரிந்த அனைத்துப் பேராளர்களுக்கும் மாநாடு துவங்குவதற்கு முன்பே வழங்கப்பட்டது தனிச்சிறப்பு!